Saturday, December 1

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்



ஒருவன் ஆன்மீக நிலையின் உச்சத்தை அடைய வேண்டுமாயின் கைகொள்ள வேண்டிய பல விஷயங்களில் ஒன்று பயத்தை வெல்வது ஆகும். பெம்மானின் கடைக்கண் பார்வை இல்லாமல் சிறு புல்லை கூட அசைக்க வழியற்றவன் மனிதன் என்பது வெளிப்படை. ஆக பயத்தை வெல்வதும் அவனருளாலே முடியும். நாம் செய்ய வேண்டியது யாதெனின் அவன் பால் நம்பிக்கை. எம் தலையை பலவாக கொய்தாலும் பயம் கொள்ளோம். எம் தலைவன்,முதல்வன்,இறைவன்,உயிர்,ஊன் அனைத்துமானவன் இருகின்றான் என்ற நம்பிக்கை. மரணம் எவ்வழியில் வந்தாயினும் யாம் எவ்வாறு கொல்லபடினும் எம்மை ஆட்கொள்ள பெம்மான் இருகின்றார் என்ற நம்பிக்கை. பயம் பூஜ்யமாக வேண்டும் என்றார் வள்ளலார் பெருமான் என்பர். எவ்வாறு பயத்தை  பூஜ்யம் ஆக்குவது. யாரிடமும் கேட்க வேண்டாம். தங்களுக்குளே எவ்வாறு என்று கேட்டு கொள்வோம். எல்லாமாய் இருந்து இயக்கும் எம்பெரும்மான் திருவடி தோன்றின் வேறு விளக்கம் யாரும் கூற வேண்டுமோ. சிவ சிவ ! சிவ சிவ ! சிவ சிவ !

நமக்காக திருநாவுக்கரச பெருமான் அருளிய  பாடல் வரிகளை பார்த்தால் தெளிவு கொள்ளலாம்.

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.



எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருக்கும் போது நாம் யாருக்கும் குடி அல்ல; அதாவது யாரும் எம்மைக் கட்டுப்படுத்தவோ, அத்து இடவோ முடியாது. நமனுக்கு அஞ்சமாட்டோம். அதாவது நமன்(யமதருமன்) எம்மிடத்து வரவே மாட்டார் என்பது இல்லை. எமன் வருவார். ஆயினும் யாம் அஞ்சமாட்டோம். எமக்கு மரணத்தைக் கண்டு அச்சமில்லை. சாகத் தயார். ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.
நரகத்தில் இடர்ப்படோம். அதாவது நரகத்திற்கு போக மாட்டோம் என்றில்லை. ஒருவேளை நரகத்திற்கே சென்றாலும் யாம் அங்கே இடர் பட மாட்டோம். ஏனெனில் சென்றவிடத்தைச் சொர்க்கமாய்ப் பாவிக்க எம் மனதிற்குத் தெரியும். ஏமாற மாட்டோம். பிணி அறியோம்.அதாவது, பிணியுற மாட்டோம் என்றில்லை, பிணியுற்றாலும், அதனால் துவண்டிட மாட்டோம். அடிபணிய மாட்டோம். எமக்கு என்றும், எப்போதும் துன்பம் என்பது கிடையாது.என்றும், எப்போதும், எந்நாளும் இன்பமே. ஏனென்றால் எம்பெருமான், பெம்மான், பொன்னர் மேனியன் இருகின்றார்.